எச்சரிக்கை... இந்தியாவில் பரவும் ஆபத்தான டெங்கு திரிபு: அதன் அறிகுறிகள் என்ன?

Dengue Fever In Tamil: இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருவதோடு, வெள்ளம் சூழ்ந்தும் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலானது தீவிரமான மற்றும் ஆபத்தான வைரஸ் மூலம் ஏற்படக்கூடியது. இந்த ஆபத்தான வைரஸ் கொசுக்களின் மூலம் பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றன.

Dangerous Dengue Strain Spreads: Symptoms And Best Fruits For Dengue Patients In Tamil

முக்கியமாக டெங்கு காய்ச்சலுக்கு எந்த சிகிச்சையும் இல்லாவிட்டாலும், அறிகுறிகளைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி விரைவில் குணமாகவும் ஒருசில உணவுகள் உதவி புரியும். தற்போது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மிகவும் ஆபத்தான டெங்கு திரிபான DENV-2 பரவுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

DENV-2 திரிபு

நிபுணர்களின் கூற்றுப்படி, டெங்கு வைரஸில் நான்கு வகைகள் உள்ளன. அவை DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4. இவற்றில் DENV-2 மிகவும் கடுமையானது மற்றும் பொதுவானது. இந்த வகை திரிபு டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த திரிபு தொற்றால் அதிக இறப்பு இல்லாவிட்டாலும், இந்த டெங்கு இரண்டாவதாக ஒருவருக்கு வந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

டெங்கு அறிகுறிகள்

டெங்கு காய்ச்சலின் போது பலர் எவ்வித அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை. அப்படியே காய்ச்சல் வந்தால், அந்த காய்ச்சல் 104 டிகிரி ஃபாரண்ஹீட் இருப்பதோடு, தலைவலி, குமட்டல், வாந்தி, கண்களுக்கு பின் வலி, மூட்டு வீக்கம், அரிப்பு, தசை வலி, மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்காமல் விட்டால், அது உயிரையே பறிக்கும் திறன் கொண்டது.

டெங்கு காய்ச்சலின் போது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகிவிடும். குறிப்பாக இரத்தத்தில் உள்ள பிளெட்லெட்டுக்களின் அளவு மிகவும் குறைந்துவிடும். இந்நிலையில் நோயெதிர்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகளை, முக்கியமாக பழங்களை உட்கொண்டு வந்தால், விரைவில் டெங்குவில் இருந்து குணமாகலாம். இப்போது டெங்குவில் இருந்து விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய பழங்களைக் காண்போம்.

1. மாதுளை

மாதுளையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான இரத்த பிளேட்லெட்டுக்களின எண்ணிக்கையை அதிகரித்து, டெங்குவில் இருந்து விடுபட உதவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது டெங்குவால் சந்திக்கும் உடல் களைப்பு, உடல் சோர்வு போன்றவற்றில் இருந்து மீள உதவும். எனவே மாதுளையை சாப்பிடலாம்.

2. கிவி

கிவி பழத்தின் தோற்றம் வித்தியாசமாக, சாப்பிடத் தூண்டக்கூடிய வகையில் இல்லாதவாறு இருக்கலாம். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இவற்றில் சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் உள்ளன. இப்படிப்பட்ட கிவி பழத்தை டெங்கு நோயாளிகள் உட்கொண்டால், அது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, விரைவில் மீள உதவும்.

3. ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும் ஆப்பிள் உடலுக்கு ஆற்றலை வழங்கும். இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

முக்கியமாக ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து, டெங்கு நோயாளிகளின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே ஆப்பிளை டெங்கு நோயாளிகள் சாப்பிடலாம்.

4. பப்பாளி

விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காரணமாக பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பப்பாளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளியை உட்கொண்டு வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, விரைவில் டெங்குவை குணமாக்க உதவும்.

5. ஆரஞ்சு

புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையைக் கொண்ட மிகவும் பிரபலமான பழம் தான் ஆரஞ்சு. இந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகின்றன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், காய்ச்சலால் உடலில் இருந்து இழக்கப்பட்ட வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு கிடைத்து, விரைவில் டெங்குவில் இரந்து குணமாக உதவிபுரியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, July 31, 2023, 13:00 [IST]
Desktop Bottom Promotion