டயட்ல இருந்தா.. இந்த கஞ்சியை காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் சீக்கிரம் குறையும்...

Posted By:

Mapillai Samba Arisi Kanji Recipe In Tamil: உலகில் தொப்பையால் அவதிப்படுவோர் ஏராளம். இந்த தொப்பையையும், அதிகரித்த உடல் பருமனையும் குறைக்க நிறைய பேர் டயட்டில் இருக்கிறார்கள். அப்படி டயட்டில் இருக்கும் போது ருசி இல்லாத உணவை நிறைய பேர் கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நீங்களும் அப்படி சுவையில்லாத உணவை தான் சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்கும், அதே சமயம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் மாப்பிள்ளை சம்பா அரிசியைக் கொண்டு, கஞ்சி தயாரித்து குடியுங்கள். இந்த கஞ்சியுடன் காய்கறிகளையும் சேர்ப்பதால் இது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த கஞ்சியை தினமும் குடித்து வரும் போது, எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Weight Loss Mapillai Samba Kanji How To Make a Mapillai Samba Arisi Kanji Recipe

உங்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மாப்பிள்ளை சம்பா அரிசி - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 10 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - 1 1/2 கப்

செய்முறை:

* முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, அரிசியை 10 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 மணிநேரம் கழித்து, அரிசி ஊற வைத்த நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை ஒரு துணியில் போட்டு, லேசாக உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, வெந்தயம் மற்றும் உலர வைத்த அரிசியை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கஞ்சி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கேரட், பீன்ஸ் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 10 கப் நீரை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரில் அரிசி ஊற வைத்த நீரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* பின்பு அதில் அரைத்த கஞ்சி பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி தொடர்ந்து அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
* ஒரு 15 நிமிடம் கஞ்சியை நன்கு கொதிக்க வைக்கும் போது, கஞ்சி கெட்டியாக, அரிசி வெந்திருக்கும்.
* பின்பு கஞ்சியை இறக்கி, அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி பரிமாறினால், சுவையான மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 29, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion