மொறுமொறு... காராபூந்தி

By Maha

Kara Boondi
மாலை வேளையில் காப்பி, டீயுடன் ஏதேனும் காரமாக சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது காராபூந்தியை செய்து சாப்பிடலாம். இந்த காராபூந்தி நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ். இதனை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை வீட்டிலேயே ஈஸியான முறையில் செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை (சிறுசிறு துளைகள் உள்ள கரண்டி) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.

அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் உற்றி, வேர்க்கடவை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும்.

இப்போது சுவையான மொறுமொறு காராபூந்தி ரெடி!!!

Story first published: Saturday, November 24, 2012, 17:54 [IST]
Desktop Bottom Promotion