இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?

International Women's Day 2026: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, அந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பைப் பொருத்தும் அளவிடப்படுகிறது. இந்தியாவில் பெண் சுதந்திரம் மற்றும் கல்வி என்பது சில இடங்களில் சிறப்பாக இருந்தாலும், இந்தியாவின் பல இடங்களில் பெண் கல்வி என்பது இப்போதும் எட்டாக்கனியாகவே உள்ளது. சர்வதேச மகளிர் தினம் மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியாவில் பெண் கல்வியின் தொடக்கப்புள்ளியைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் பெண் கல்வியின் வரலாறு சமூக சீர்திருத்தம், தைரியம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெண் கல்வியின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தியாவில் பெண்களுக்கு கல்வி கற்பிப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, சமூகத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பெண் கல்விக்கு பலமான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஒரு சில தொலைநோக்கு சீர்திருத்தவாதிகள் அவற்றை உடைத்து, நாட்டில் பெண்கள் கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.

International Women s Day 2026 Which Is the First Girls School in India

இந்தியாவின் முதல் பெண் பள்ளி எது?

இந்த கேள்விக்கான பதில் சற்று குழப்பமானது. வரலாற்றாசிரியர்களும் கல்வியாளர்களும் பெரும்பாலும் அங்கீகாரம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிறுவனங்களை சுட்டிக்காட்டுகின்றனர். கொல்கத்தாவின் பெதுன் பள்ளி 1849-ல் காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் முறையாக நிறுவப்பட்ட மிகப் பழமையான பெண்கள் பள்ளியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டாலும், பெண் கல்விக்காக இந்தியர்களால் நிறுவப்பட்டு நடத்தப்படும் பெண்களுக்கான முதல் பள்ளி ஜனவரி 1, 1848 அன்று புனேவில் உள்ள பிடே வாடாவில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரால் தொடங்கப்பட்டது. ஆனால் 1783-ல் சென்னையில் வெறும் 10 மாணவர்களுடன் பிரசிடென்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

இந்தியர்களால் முதலில் கட்டப்பட்ட பெண்கள் பள்ளி

சென்னையிலும், கொல்கத்தாவிலும் பெண்களுக்கான பள்ளியை ஆங்கிலேயர்கள் கட்டியிருந்தாலும், இந்தியர்களால் உருவாக்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 அன்று, சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோர் புனேவின் பிடே வாடாவில் பெண்களுக்காக ஒரு பள்ளியை நிறுவினர். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் பெண்களுக்கு கல்வி கற்பிபிப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு, இந்தியர்களால் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியாக இந்த நிறுவனம் இன்றும் நினைவுகூரப்படுகிறது.

புலேஸ் பள்ளி ஏன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது?

இது அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தில் உள்ள பெண்களுக்காக திறக்கப்பட்ட பள்ளியாகும். இதன் நிறுவனர் சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார். சாதி அடிப்படையிலான மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டை இந்த பள்ளி நேரடியாக எதிர்த்தது. இது ஆங்கிலேயர்களின் ஆதரவு இல்லாமல், முழுக்க முழுக்க இந்தியர்களால் முற்றிலும் ஒரு சமூக சீர்திருத்த முயற்சியாக நிறுவப்பட்டது. அனைத்து சாதி பெண்களுக்கும் பாடம் கற்பித்ததால் சாவித்ரி பாய் பல துன்ன்புறுத்தல்கள் மற்றும் சமூக புறக்கணிப்புகளை எதிர்கொண்டார் சாவித்ரிபாய் புலே தொடர்ந்து கற்பித்தார், இந்தப் பள்ளியை இந்திய சமூக வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக மாற்றினார்.

பராசத் காளிகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கொல்கத்தா

சில வரலாற்றாசிரியர்கள் 1847 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்ட பராசத் காளிகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, இந்தியாவில் பெண்களுக்கான கல்விக்கான ஆரம்பகால நிறுவனங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்த பள்ளி முதன்மையாக பிரபுத்துவ மற்றும் உயர்சாதி பெண்களுக்கு மட்டுமே கல்வி சேவை செய்தது, மேலும் பிற சமூக பெண்கள் கல்வியை புறக்கணித்தது. அதன் சாதிய கண்ணோட்டத்திற்காக இது இந்தியாவில் பெண்களுக்கான கல்விக்கான முதல் பெண்கள் பள்ளியாக உலகளவில் அங்கீகரிக்கப்படவில்லை,

பெத்தூன் பள்ளி, கொல்கத்தா

1849 ஆம் ஆண்டு கல்கத்தா பெண்கள் பள்ளியாக நிறுவப்பட்ட கொல்கத்தாவில் உள்ள பெத்தூன் பள்ளி, இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பெண்கள் பள்ளியாக அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுகிறது. இது ஜான் எலியட் டிரிங்க்வாட்டர் பெத்தூனால் நிறுவப்பட்டது. இது அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் கல்வி நிறுவனமாக இருக்க பல கரணங்கள் உள்ளது.

- இது கட்டமைக்கப்பட்ட நிறுவன மற்றும் நிர்வாக ஆதரவைப் பெற்றது.

- இது ஒரு முறையான பாடத்திட்டம் மற்றும் பள்ளிப்படிப்பு முறையைப் பின்பற்றியது.

- பின்னர் இது ஆசியாவின் முதல் பெண்கள் கல்லூரியான பெத்தூன் கல்லூரிக்கு (1879) அடித்தளமாக மாறியது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களின் கல்வியை இயல்பாக்குவதிலும், கல்விக் கொள்கையை வடிமைப்பதிலும் பெத்தூன் பள்ளி முக்கிய பங்கு வகித்தது.

Desktop Bottom Promotion