மணமணக்கும்.. ருசியான... சுட்ட மாங்காய் கார ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..

Posted By:

Sutta Manga Kara Rasam Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மாங்காய் சீசனும் தொடங்கிவிட்டது. மாங்காயை பார்த்ததுமே அதை வாங்கி ஊறுகாய் போட தான் நினைப்போம். ஆனால் அந்த மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் சுட்ட மாங்காய் கார ரசம்.

இந்த ரசத்தின் ஸ்பெஷலே மாங்காயை சுட்டு செய்வது தான். இந்த ரசத்தில் வீசும் அந்த ஸ்மோக்கி சுவையானது இந்த ரசத்தின் சுவையை வித்தியாசமாக காட்டும். ஆனால் ஒருமுறை இந்த ரசத்தை செய்தால், தினமும் செய்து தர சொல்லி கேட்பார்கள். அந்த அளவில் இந்த ரசம் ருசியாக இருக்கும்.

Sutta Manga Kara Rasam How To Make a Spicy Mango Rasam Recipe

உங்களுக்கு சுட்ட மாங்காய் கார ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுட்ட மாங்காய் கார ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சுட்டு அரைப்பதற்கு...

* கிளிமூக்கு மாங்காய் - 2
* பச்சை மிளகாய் - 4
* நல்லெண்ணெய் - சிறிது
* தண்ணீர் - 3/4 டம்ளர்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 50 கிராம்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் மாங்காயை எடுத்து, அதில் நல்லெண்ணெய் தடவி, ஒரு கம்பியில் சொருகி, நெருப்பில் நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மாங்காயை நன்கு சுட்டதும், அதை சுடுநீரில் போட்டு குளிர்விக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாயில் நல்லெண்ணெய் தடவி, அதையும் கம்பியில் சொருகி, அதையும் நெருப்பில் சுட்டு எடுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு நீரில் உள்ள மாங்காயை எடுத்து, அதன் மேல் தோலை நீக்கிவிட்டு, அதன் சதைப் பகுதியை ஒரு கிண்ணத்தில் துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் மாங்காய் மற்றும் சுட்ட பச்சை மிளகாயை சேர்த்து, அத்துடன் 3/4 டம்ளர் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் விழுதை சேர்த்து, 1/2 லிட்டர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, ரசம் ஒரு கொதி வந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான சுட்ட மாங்காய் கார ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, April 24, 2025, 14:50 [IST]
Desktop Bottom Promotion