1 கப் கொண்டைக்கடலை இருந்தா இந்த குருமாவை செய்யுங்க... பூரி, சப்பாத்திக்கு சிக்கன் குருமா மாறியே இருக்கும்...!

Posted By:

Sundal Kurma Recipe in Tamil: இன்று இரவு சப்பாத்தி அல்லது செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன கிரேவி செய்வதென்று தெரியவில்லையா? வழக்கமாக சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத்தான் செய்வீர்களா? ஏதாவது புதிதாக சைடிஷ் செய்ய ஆசைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் சுண்டல் இருந்தால் போதும் அட்டகாசமான சுவையில் ஒரு குருமா செய்யலாம்.

சுண்டலை எப்போதும் ஒரே ஸ்டைலில் கிரேவியை செய்யாமல், இன்று சற்று வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவியானது மட்டன் கிரேவியே தோற்றுப்போகும் அளவில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Sundal Kurma Recipe How to Make Sundal Kurma

உங்களுக்கு சுண்டல் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 1 கப் வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை
- 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 நறுக்கிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- அரை ஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை:

- முதலில் கொண்டைக்கடலையை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

- பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும் மற்றும் இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

- அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு மூடி வைத்து சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

- 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

- பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

- பின்பு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதை சூடாக்கவும்.

- எண்ணெய் சூடான பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

- இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

- பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

- தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

- பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

- அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

- 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

- அவ்வளவுதான் சூடான கொண்டைக்கடலை குருமா ரெடி. இது சப்பாத்தி, பூரி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, December 8, 2025, 18:20 [IST]
Desktop Bottom Promotion