இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான... ரோட்டு கடை பாம்பே சட்னி

Posted By:

Rottu Kadai Bombay Chutney: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? அதுவும் எளிமையான முறையில் ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரோட்டு கடை பாம்பே சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக வழக்கமாக இரண்டு தோசை சாப்பிடுபவர்கள், இந்த சட்னியை செய்து கொண்டு ஒரு தோசை அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த சட்னி ருசியாக இருக்கும்.

Rottu Kadai Bombay Chutney Recipe In Tamil

உங்களுக்கு ரோட்டு கடை பாம்பே சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டு கடை பாம்பே சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சில நிமிடங்கள் வாக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து, பின் மத்து கொண்டு தக்காளியை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்து, அதில் ஒரு கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை வாணலியில் ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மேலே பாதி எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரோட்டு கடை பாம்பே சட்னி தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Thursday, July 20, 2023, 14:15 [IST]
Desktop Bottom Promotion