சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Rava Keerai Adai Recipe In Tamil: வீட்டில் இட்லி, தோசை மாவும் இல்லையா? காலையில் என்ன டிபன் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் ரவையும், முருங்கைக்கீரையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் அடை சுட்டு சாப்பிடுங்கள். அதுவும் இந்த அடையை விரும்பிய காய்கறிகளையும் சேர்த்து செய்யலாம். இதனால் இந்த அடை சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. முக்கியமாக இந்த அடை சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். இதற்கு எந்த சைடு டிஷ் டிஷ்ஷும் தேவைப்படாது.

Rava Keerai Adai How To Make This Healthy Breakfast Recipe

உங்களுக்கு ரவா கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு..

* ரவை - 1 கப்
* கடலை மாவு - 1 கப்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* எள்ளு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவை, 1 கப் கடலை மாவு, 1 கப் தயிர் மற்றும் 1 கப் நீரை ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட், ஸ்வீட் கார்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை ஊற வைத்துள்ள மாவுடன் சேர்த்து, அத்துடன் ஆப்ப சோடா, சிறிது நீரை ஊற்றி நன்கு அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எள்ளு விதைகளை சேர்த்து, அதன் பின் ஒரு கரண்டி மாவை ஊற்றி, மெல்லியதாக தேய்க்காமல் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா கீரை அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, August 13, 2026, 7:03 [IST]
Desktop Bottom Promotion