புடலங்காய் விதையை தூக்கி போடாம இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!

Posted By:

Pudalangai Vithai Chutney Recipe in Tamil: நாம் வீட்டில் பல காய்கறிகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி வாங்கியவற்றில் பலவற்றை உபயோகிக்காமல் மறந்து விடும் போது அவை வீணாகி விடும். ஆனால் வீணாகும் காய்கறி கழிவுகளை வைத்து செடிகளுக்கு உரம், வீட்டிற்கு தேவைப்படும் எரிவாயு என பலவற்றை இப்போது தயாரித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் வீணாக தூக்கிய எறியும் ஒரு பொருளை வைத்து சட்டினி செய்ய முடியும் தெரியுமா? ஆமாங்க நீங்கள் எப்போதும் தூக்கி போடக் கூடிய புடலங்காய் விதையை வைத்து தான் சட்னி செய்ய போறோம். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

Pudalangai Vithai Chutney Recipe How to Make Pudalangai Vithai Chutney

தேவையான பொருள்கள்:

- புடலங்காய் உள்ளே உள்ள விதை - 2 கப்
- சின்ன வெங்காயம் - 20 அல்லது 25
- தக்காளி - 2
- பூண்டு - 3 பல்
- காய்ந்த மிளகாய் - 4
- தேங்காய் - ½ மூடி
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - 1 டீ ஸ்பூன்
- உடைத்த உளுந்து - 1 டீ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

- முதலில் புடலங்காயை கழுவி இரண்டாக நறுக்கி உள்ளே பஞ்சு போன்று இருக்கும் விதை பகுதியை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

- வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பல் அளவு பெரிதாக இருந்தால் இரண்டு மூன்றாக நறுக்கி கொள்ளவும். நறுக்கி வைத்து கொள்ளவும்.

- தேங்காயை உங்கள் விருப்பபடி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.

- புளியை ஓடும் தண்ணீரில் ஓடு மற்றும் குப்பை இல்லாமல் அலசி எடுத்து வைத்து கொள்ளவும்.

- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

- அதனுடன் புடலங்காய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கும்.

- கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.

- வதக்கி வைத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

- பின் தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.

- அதனுடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் வித்தியாசமான புடலங்காய் விதை சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, July 14, 2025, 20:05 [IST]
Desktop Bottom Promotion