1 உருளைக்கிழங்கும், 1 கப் அவலும் இருந்தா.. நைட் டின்னருக்கு இத ட்ரை பண்ணுங்க..

Posted By:

Potato Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் சப்பாத்தியை ப்ளைனாக செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை புதுமையான சுவையில் சப்பாத்தியை செய்யுங்கள். அதுவும் உருளைக்கிழங்கும், அவலும் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆலு பராத்தா செய்யுங்கள்.

இந்த ஆலு பராத்தா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் இதை வெறுமனே கூட சாப்பிடலாம். ஒருவேளை சைடு டிஷ் தேவைப்பட்டால், தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும். இன்று இரவு என்ன சமைப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்றால் இந்த சப்பாத்தியை ட்ரை செய்து பாருங்கள்.

Potato Chapati How To Make a Aloo Paratha

உங்களுக்கு உருளைக்கிழங்கு சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய உருளைக்கிழங்கு - 1
* அவல் - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கோதுமை மாவு - 1/2 கப்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துருவி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் 1 கப் அவலைப் போட்டு, நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் அரைத்த அவலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, கோதுமை மாவில் பிரட்டி, சப்பாத்தி போன்று தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ஆலு பராத்தா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, December 18, 2025, 19:11 [IST]
Desktop Bottom Promotion