பூண்டு குழம்பை செய்யும் போது இந்த 2 பொருளை சேத்துக்கோங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Poondu Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பூண்டு குழம்பு பிடிக்குமா? இதனால் பூண்டு குழம்பை அடிக்கடி செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் தான் பூண்டு குழம்பை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையில் பூண்டு குழம்பை செய்யுங்கள். அதற்கு பூண்டு குழம்பு செய்யும் போது 2 பொருட்களை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். அது தான் வேர்க்கடலையும், பச்சை மிளகாயும்.

இந்த இரண்டும் தான் குழம்பிற்கு தனித்துவமான சுவையை கொடுக்கிறது. முக்கியமாக இப்படி குழம்பு செய்யும் போது, அதன் சுவை நாக்கிலேயே நிக்கும். இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.

Poondu Kulambu How To Make a Garlic Kuzhambu Recipe

உங்களுக்கு பூண்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு..

* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 150 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, சீரகம், எள்ளு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, பெருங்காயத் தூள் சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்த பின், வெல்லத்தை சிறிது சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூண்டு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 9, 2025, 14:51 [IST]
Desktop Bottom Promotion