வேர்க்கடலையும், எள்ளும் வெச்சு.. 10 நிமிடத்தில் இந்த ஆந்திரா சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..

Posted By:

Peanut Sesame Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அதற்கு எப்போதும் ஏதாவது ஒரு சட்னியை செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சைடு டிஷ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா?

அப்படியானால் ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை எள்ளு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்ய குறைவான பொருட்களே போதுமானது. முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், இட்லி, தோசையை கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

Peanut Sesame Chutney How To Make a Andhra Special Verkadalai Ellu Chutney

உங்களுக்கு வேர்க்கடலை எள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை எள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளை எள்ளு - 3 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகளை சேர்த்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டிப் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளு விதைகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை எள்ளு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 17, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion