இட்லி, தோசைக்கு இந்த நெல்லை ஸ்டைல் பருப்பு குழம்பை சைடிஷா செஞ்சு பாருங்க... எவ்வளவு சுட்டாலும் பத்தாது...!

Posted By:

Nellai Paruppu Sambar Recipe in Tamil: இட்லி, தோசை என்றாலே பொதுவாக அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னி இல்லை என்றால் சாம்பார் வைப்பார்கள். எவ்வளவு நாள்தான் இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பாரையே செய்துக் கொண்டிருப்பீர்கள். சற்று வித்தியாசமாக அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சைடிஷ் செய்ய விரும்புகிறீர்களா?

ஆம் எனில், இந்த திருநெல்வேலி ஸ்டைல் பருப்பு குழம்பை செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் பருப்பு குழம்பு போல அல்லாமல் இது வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பருப்பு குழம்பு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்த எளிமையான மற்றும் சுவையான பருப்பு குழம்பை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Nellai Paruppu Sambar Recipe How to Make Nellai Paruppu Sambar

தேவையானப் பொருட்கள்:

- துவரம் பருப்பு - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 20
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 3
- நறுக்கிய தேங்காய் - 2 துண்டு
- பெரிய தக்காளி - 1
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- புளி - சிறிதளவு
- சீரகம் - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- நறுக்கிய சின்ன வெங்காயம் - சிறிதளவு

செய்முறை:

- தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். புளியைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

- குக்கரில் துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

- பருப்பு நன்கு வெந்தவுடன் இடித்த தேங்காய் விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வரவிடவும்.

- அதே நேரத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.

- பருப்பு கொதி வந்தவுடன் அதில் தாளிப்பை கொட்டி நன்கு கிளறவும்.

- சுவையான நெல்லை பருப்பு குழம்பு தயார். இது இட்லி, தோசை மற்றும் சாதத்தில் ஊற்றி சாப்பிட சூப்பராக இருக்கும்.

- முக்கியமாக தேங்காயை நைசாக அரைக்கக் கூடாது. குழம்பில் தேங்காய் மிதந்து கொண்டிருக்கும் படி இருக்க வேண்டும் மற்றும் புளியும் மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். அப்போதுதான் குழம்பு சுவையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Monday, August 4, 2025, 20:11 [IST]
Desktop Bottom Promotion