மொச்சையை பிதுக்கி இப்படி குழம்பு வையுங்க.. மட்டன் குழம்பே தோத்து போயிடும்...

Posted By:

Mochai Pidukku Paruppu Kuzhambu: புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை நிறைய பேர் சாப்பிடமாட்டார்கள். நீங்களும் இப்படி புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டீர்களா? அப்படியானால் ஒவ்வொரு நாளும் சமைக்கும் போது என்ன சமைப்பது என்று நிச்சயம் பல மணிநேரம் யோசனை செய்வீர்கள்.

உங்கள் வசதிக்காக ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட, அதுவும் மட்டன் குழம்பே தோற்றுபோகும் அளவிலான ஒரு சுவையான ரெசிபியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது வேறொன்றும் இல்லை மொச்சை பிதுக்கு பருப்பு குழம்பு.

Mochai Pidukku Paruppu Kuzhambu Recipe

இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு இந்த மொச்சை பிதுக்கு பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மொச்சை பிதுக்கு பருப்பு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* பட்டை - 1/2 இன்ச்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

பிற பொருட்கள்:

* பச்சை மொச்சை பயறு - 500 கிராம்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் பச்சை மொச்சையை வாங்கி, அதனுள் உள்ள பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பருப்பை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன்பின் அதன் தோலை பிதுக்கி எடுத்து விட்டு, பருப்பை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், கசகசா, முந்திரி, பூண்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, பிதுக்கி வைத்துள்ள மொச்சை பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* குக்கர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மொச்சை பிதுக்கு பருப்பு குழம்பு தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Thursday, October 5, 2023, 12:57 [IST]
Desktop Bottom Promotion