சாதத்துடன் சாப்பிட அட்டகாசமா இருக்கும்... மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்

Posted By:

Milagai Killi Potta Sambar: நீங்கள் சாம்பார் பிரியரா? அடிக்கடி சாம்பார் செய்து சாப்பிடுவீர்களா? இதுவரை நீங்கள் சாம்பாரில் சாம்பார் தூள் சேர்த்து தான் செய்திருப்பீர்கள். ஆனால் சாம்பார் தூள் சேர்க்காமலேயே செய்யக்கூடிய ஒரு சாம்பார் குறித்து தெரியுமா? அது தான் மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்.

இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். உங்களுக்கு மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Milagai Killi Potta Sambar Recipe In Tamil

கீழே மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 2
* கல் உப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

புளிச்சாறு செய்வதற்கு..

* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தண்ணீர் - 1 கப்

பருப்பு வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்

செய்முறை:

* முதலில் புளியை ஒரு கப் சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு 2 1/2 கப் நீரை ஊற வைத்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வரமிளகாயை இரு துண்டுகளாக்கி போட வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயையும் இரண்டாக வெட்டிப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு, கல் உப்பை சேர்த்து 2-3 நிமிடம் வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் சாம்பாரைக் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Saturday, August 5, 2023, 13:35 [IST]
Desktop Bottom Promotion