கொண்டைக்கடலை கத்திரிக்காய் கார குழம்பு

கொரோனா காலத்தில் புரோட்டீன் நிறைந்த சுண்டல் என்னும் கொண்டைக்கடலையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் கொண்டைக்கடலையை கத்திரிக்காயுடன் சேர்த்து காரக் குழம்பு செய்தால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

Posted By:

கொரோனா காலத்தில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சுண்டல் என்னும் கொண்டைக்கடலையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் இந்த கொண்டைக்கடலையை கத்திரிக்காயுடன் சேர்த்து காரக் குழம்பு செய்தால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். இந்த காரக் குழம்பை சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

Kondakadalai Kathirikai Kaara Kuzhambu Recipe In Tamil

உங்களுக்கு சுவையான கொண்டைக்கடலை கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு சுண்டல்/கொண்டைக்கடலை - 3/4 கப் (நீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும்)

* வெங்காயம் - 2 (நறுக்கியது)

* பூண்டு - 10-15 பல்

* தக்காளி - 2 (நறுக்கியது)

* கத்திரிக்காய் - 3

* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* தேங்காய் விழுது - 4 டேபிள் ஸ்பூன்

* புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் + 1 கப் நீர்

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* குழம்பு வடகம்/கருவடகம் - 1 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் கருப்பு சுண்டல்/கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நீர் ஊற்றி அடுப்பில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி, நீரை வடிகட்டி விட்டு, சுண்டலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு கத்திரிக்காயை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் புளி பேஸ்ட் மற்றும் நீரை ஊற்றி பச்சை வாசனை போகும் அளவில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியாக அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை கத்திரிக்காய் கார குழம்பு தயார்.

Image Courtesy: naliniscooking

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 18, 2021, 13:02 [IST]
Desktop Bottom Promotion