1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்...

Posted By:

Erode Chicken Thanni Kuzhambu Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? அதுவும் அதைக் கொண்டு முக்கியமாக குழம்பை தவறாமல் செய்வீர்களா? அப்படியானால் ஒரே சுவையில் சிக்கன் குழம்பு செய்யாமல், ஒருமுறை ஈரோடு சிக்கன் தண்ணி குழம்பை செய்யுங்கள்.

இந்த குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த குழம்பை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் ருசி நாக்கில் நிற்கும்.

Erode Chicken Thanni Kuzhambu How To Make Erode Style Chicken Thanni Kuzhambu

உங்களுக்கு ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

குழம்பிற்கு...

* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு..

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய், அரிசி மற்றும் மல்லி விதைகளை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் வதக்கிய வெங்காயம் மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* பின் அத்துடன் அரைத்த பொடியில் பாதியை சேர்த்து அரைத்து, மீதி பொடியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கன் நிறம் மாறியதும், அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, 2 1/2 கப் நீரை ஊற்றி, பின் அரைத்து எடுத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், சுவையான ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, March 15, 2026, 8:06 [IST]
Desktop Bottom Promotion