சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்.. கத்திரிக்காய் பருப்பு கூட்டு

Posted By:

Kathirikai Paruppu Kootu Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போறீங்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் குருமா, மசாலா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று கூட்டு செய்யுங்கள். அதுவும் கத்திரிக்காய் பருப்பு கூட்டு செய்யுங்கள்.

இந்த பருப்பு கூட்டு சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் இதை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கூட்டு செய்வதற்கு சுபலமாக இருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Kathirikai Paruppu Kootu Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1/2 கப் (நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ளவும்)
* கடுகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புளிநீர் - 1 கப்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லி - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் -1/4 கப்
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி விதை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சில நொடிகள் வறுக்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, வரமிளகாய், தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் புளிநீரை ஊற்றி, வெல்லத்தை சேர்த்து, குறைந்தது 5 நிமிடம் கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் கிளறும் போது லேசாக மசித்து விட வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் பருப்பு கூட்டு தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Friday, October 27, 2023, 13:50 [IST]
Desktop Bottom Promotion