4 கத்திரிக்காயை வெச்சு இப்படியொரு சட்னி செய்யுங்க.. கத்திரிக்காய் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Kathirikai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடன், அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? ஆனால் யாரும் அதை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னியை செய்தால், கத்திரிக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Kathirikai Chutney How To Make a Brinjal Chutney Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 3 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறு துண்டு
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)

தாளிப்பதற்கு..

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் .,- 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து நிறம் மாறாத அளவில் வறுத்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வாணலியில் உள்ள எண்ணெயுடன் இன்னும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கத்திரிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கத்திரிக்காயை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் வெந்ததும், தக்காளி மற்றும் புளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை கிளறி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காய கத்திரிக்காய் கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். அதிகமாக நீரை சேர்த்துவிட வேண்டாம். இந்த சட்னி ஓரளவு கெட்டியாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Monday, April 22, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion