1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..

Posted By:

Karadaiyan Nombu Sweet Adai Recipe In Tamil: காரடையான் நோன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், மாங்கல்ய பலத்திற்காக மேற்கொள்ளும் ஒரு விரதமாகும். பொதுவாக இந்த நோன்பு மாசி மாதத்தின் கடைசி நாளில் கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14 ஆம் தேதி வருகிறது.

சாவித்ரி எமதர்மனிடம் இருந்து தனது கணவன் சத்யவானின் உயிரைக் காப்பாற்றியதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பெண்கள் மாங்கல்ய பலத்திற்காக அம்மனுக்கு சிறப்பு பூஜையை செய்வார்கள். அப்போது உருக்காத வெண்ணெயுடன், கார மற்றும் இனிப்பு அடையை செய்து படைத்து வழிபாடு செய்வார்கள் மற்றும் பூஜையின் முடிவில் மஞ்சள் நோன்பு கயிற்றினை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

Karadaiyan Nombu 2026 How To Make Karadaiyan Nombu Sweet Adai Recipe

உங்களுக்கு இந்த காரடையான் நோன்பு இனிப்பு அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரடையான் நோன்பு இனிப்பு அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* காராமணி - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* அரிசி மாவு - 1 கப்
* பொடித்த வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காராமணியை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் வறுத்த காராமணியை சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, காராமணியில் உள்ள நீரை வடிகட்டி, காராமணியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரிசி மாவை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் பொடித்த வெல்லத்தை எடுத்து, அத்துடன் 1 1/2 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், பொடியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெல்ல நீரை ஊற்றி, அத்துடன் வேக வைத்துள்ள காராமணி மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, கட்டிகளின்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவானது கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து வெதுவெதுப்பான நிலைக்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* பிறகு சிறிது மாவை எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, நடுவே துளையிட்டு, நெய் தடவிய இட்லி தட்டில் வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தில் அந்த இட்லி தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, March 13, 2026, 17:56 [IST]
Desktop Bottom Promotion