பனி காலத்துல இந்த 3 இலைகளை வெச்சு ரசம் செஞ்சு சாப்பிடுங்க.. மூட்டு வலி முதல் சளி வரை பறந்து போகும்...

Posted By:

Healthy Rasam Recipe In Tamil: மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. இதனால் தற்போது பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இப்படி பனி அதிகம் பொழிவதால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடக்கத்தான் கீரை, தூதுவளை மற்றும் துளசி ஆகிய மூன்னு இலைகளைக் கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதுவும் இந்த ரசத்தை மதிய வேளையில் சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது சூப் போன்றும் ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.

Healthy Rasam How To Make Three Leaves Rasam

உங்களுக்கு இந்த மூலிகை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூலிகை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைத்து பொடிப்பதற்கு...

* சீரகம் - 1 ஸ்பூன்
* மிளகு - 1 ஸ்பூன்
* மல்லி - 1/4 ஸ்பூன்
* கிராம்பு - 2
* பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 5
* முடக்கத்தான் இலை - சிறிது
* தூதுவளை இலை - சிறிது
* துளசி இலை - 6
* வரமிளகாய் - 2
* பூண்டு - 7 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து

ரசத்திற்கு..

* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 3

தாளிப்பதற்கு...

* நெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 ஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு, அதில் நீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, மல்லி, கிராம்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் 5 சின்ன வெங்காயம், வரமிளகாய், தூதுவளை இலை, முடக்கத்தான் இலை மற்றும் துளசி இலைகளை சேர்த்து அரைத்து, அதையும் தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த ஜாரில் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து, புளி கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், அரைத்த மிளகு சீரக பொடி மற்றும் 3 தக்காளியை சேர்த்து, கைகளால் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த இலைகளை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கிளறி, நுரைக்கட்டி கொதிக்க தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மூலிகை ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 16, 2025, 14:45 [IST]
Desktop Bottom Promotion