கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...

Posted By:

Godhumai Dosa With Poondu Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்பவும் ஒரே மாதிரி தான் டிபன் செய்வீர்களா? இதனால் வரவர உங்கள் வீட்டில் உள்ளோர் சரியாக சாப்பிடுவதில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு விதவிதமாக சமைத்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் அருமையான காலை டிபனை செய்ய நினைத்தால், கோதுமை தோசையை செய்து கொடுங்கள்.

Godhumai Dosa With Poondu Kara Chutney How To Make Wheat Dosa With Garlic Chutney Recipe

கோதுமை தோசையில் என்ன ஸ்பெஷல் உள்ளது என்று கேட்கலாம். இந்த கோதுமை தோசையில் ஒருசில பொருட்களை வதக்கி சேர்த்து தோசையாக சுடும் போது சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு பூண்டு கார சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

இந்த கோதுமை தோசை மற்றும் பூண்டு கார சட்னி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த கோதுமை தோசை மற்றும் பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை தோசை மற்றும் பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்குவதற்கு..

* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்

கோதுமை தோசைக்கு..

* கோதுமை மாவு - 1 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வதக்கிய பொருட்கள்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு

சட்னிக்கு..

* வரமிளகாய் - 25
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 6
* பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன தக்காளி - 1

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து, வாணலியின் சூட்டிலேயே சிறிது நேரம் வதக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்த பின், அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, முதலில் கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கலந்து ஒரு 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சட்னிக்கு மிக்சர் ஜாரில் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த 25 வரமிளகாய், புளி, சின்ன வெங்காயம், பூண்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிய அளவிலான தக்காளியை சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக நீர் ஊற்றக்கூடாது.
* அடுத்து சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான பூண்டு கார சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தயாரித்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 27, 2026, 7:01 [IST]
Desktop Bottom Promotion