தேங்காய் தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Coconut Dosa With Kara Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் தோசை பிரியரா? தினமும் காலையில் உங்கள் வீட்டில் தோசை தான் டிபனாக இருக்கும். அப்படியானால் எப்பவும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு சாப்பிடாமல், ஒருமுறை தேங்காய் தோசை சுட்டு சாப்பிடுங்கள்.

Coconut Dosa With Spicy Chutney How To Make Thengai Dosa With Kara Chutney

இந்த தோசை பஞ்சு போன்று இருப்பதால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். இந்த தோசைக்கு கார சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். இந்த டிபன் காம்போவை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் போட்டி போட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த தேங்காய் தோசை மற்றும் கார சட்னி ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த தேங்காய் தோசையும், கார சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தோசை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* பச்சரிசி - 1 கப்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சாதம் - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தேங்காய் தண்ணீர் - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

சட்னிக்கு..

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 15
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 10 (வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னி தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயத்தை ஒன்றாக எடுத்துக் கொண்டு, நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, அத்துடன் 1/2 கப் சாதம், 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் 1/2 கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி மாவுடன் சேர்த்து கைகளால் நன்கு கிளறி, மூடி வைத்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம், புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் நீரில் ஊற வைத்த வரமிளகாயை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* இறுதியாக அரைத்த சட்னியை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், கார சட்னி தயார்.
* அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊத்தாப்பம் போன்று ஓரளவு மொத்தமாக ஊற்றி, தோசையின் மேற்புறம் ஓட்டை ஓட்டையாக வந்ததும், மூடி வைத்து 30 நொடிகள் வேக வைத்து, தோசையை திருப்பி போடாமல் எடுத்தால், சுவையான தேங்காய் தோசை தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் தோசையாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 23, 2026, 6:53 [IST]
Desktop Bottom Promotion