வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

Posted By:

Chettinad Vazhakkai Kurma Recipe: புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள்.

நீங்களும் அப்படி அசைவம் சாப்பிடமாட்டீர்களா? ஆனால் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சாதம், சப்பாத்தி, பூரிக்கு ஒரு சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமாவை செய்யுங்கள். இது மிகவும் சுவையாகவும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

Chettinad Vazhakkai Kurma Recipe

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வாழைக்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/2 மூடி

வறுத்து அரைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 பெரிய சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், துவரம் பருப்பு, மல்லி விதை, சோம்பு, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் துண்டுகளாக்கப்பட்ட வாழைக்காயை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து வாழைக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, வாழைக்காயை நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.
* பிறகு தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் குருமா தயார்.

Image Courtesy: ticklingpalates

[ of 5 - Users]
Desktop Bottom Promotion