பாவக்காயை துருவி இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Bittergourd Podi Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பாவக்காய் என்றாலே ஓடிவிடுவார்களா? எப்படி செய்தாலும் பாவக்காயை சுவைக்கவேமாட்டார்களா? அப்படியானால் பாவக்காய் தெரியாத வகையில் பாவக்காயை சமைத்து கொடுங்கள். எப்படி என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் வீட்டில் இருப்போர் இட்லி பொடியை அடிக்கடி சாப்பிடுவார்கள் என்றால், அவர்களுக்கு இட்லி பொடி போன்றே பாகற்காய் பொடியை செய்து வைத்துவிடுங்கள்.

இந்த பாவக்காய் பொடியில் கசப்பு அதிகம் தெரியாது. தேங்காய் மற்றும் பருப்புக்களை சேர்த்து செய்வதால், இதன் சுவை அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த பாவக்காய் பொடியை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாவக்காய் பொடி மிகவும் நல்லது.

Bittergourd Podi How To Make a Pavakkai Podi Recipe

உங்களுக்கு பாவக்காய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாவக்காய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாவக்காய் - 150 கிராம்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* புளி - சிறு துண்டு
* பூண்டு - 5 சிறிய பல்
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பாவக்காயை கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அதை துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய பாவக்காயில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய பாகற்காயை சேர்த்து நன்கு நீர் வற்றும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து, அதில் உள்ள நீர் வற்றும் வரை வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மீண்டும் அந்த வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி, சீரகம், வரமிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் வறுத்த பாவக்காய், துருவிய தேங்காய் மற்றும் வறுத்த பிற பொருட்களையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பொடித்ததை ஒரு தட்டில் போட்டு நன்கு குளிர்ந்த பின், காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொண்டால், பாவக்காய் பொடி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, December 6, 2024, 15:10 [IST]
Desktop Bottom Promotion