வாழைத்தண்டு வெச்சு ஒருடைம் இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. நம்பமாட்டீங்க.. அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்...

Posted By:

Vazhaithandu Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைத்தண்டு உள்ளதா? பொதுவாக வீட்டில் வாழைத்தண்டு இருந்தால், அதைக் கொண்டு பொரியல், கூட்டு என்று தான் செய்வோம். ஆனால் அந்த வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்யலாம் தெரியுமா? என்னது, சட்னியா? அது நல்லவா இருக்கும்? என்று நீங்கள் கேட்கலாம்.

உண்மையிலேயே ஒருமுறை வாழைத்தண்டு கொண்டு சட்னி செய்து பாருங்கள். சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சட்னியை செய்தால், இனிமேல் வாழைத்தண்டு வாங்கினால் இந்த சட்னியை தான் செய்வீர்கள். அந்த அளவில் சட்னி அருமையாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Banana Stem Chutney How To Make A Vazhaithandu Chutney Recipe

உங்களுக்கு வாழைத்தண்டு சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வாழைத்தண்டு - 1 கையளவு
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் வாழைத்தண்டில் உள்ள நார்பகுதியை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி நீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, February 27, 2025, 7:08 [IST]
Desktop Bottom Promotion