மட்டன் வாங்குனா இந்த பக்குவத்துல குழம்பு செய்யுங்க.. இட்லி, பூரி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அள்ளும்...

Posted By:

Aatu Kari Kuzhambu Recipe In Tamil: இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் செய்து சாப்பிட போகிறீர்களா? மட்டன் வாங்கினால் எப்போதும் ஒரே சுவையில் தான் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பை செய்யுங்கள்.

இப்படி குழம்பு செய்யும் போது, அது இட்லி, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மட்டன் குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஒருமுறை இப்படி செய்தால், பின் அடிக்கடி இந்த சுவையில் செய்ய சொல்லி கேட்பார்கள்.

Aatu Kari Kuzhambu How To Make a Mutton Kuzhambu

உங்களுக்கு மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 3
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1 இதழ்
* மல்லி - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* மிளகு - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி

குழம்பு தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 சிட்டிகை
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* மட்டன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/4 ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, துருவிய 1/4 மூடி தேங்காயை சேர்த்து, வாணலியின் சூட்டில் வதக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆட்டுக்கறி குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, January 4, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion