Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
மகாவிஷ்ணுவிற்கு ஏன் துளசி ரொம்ப பிடிக்கும் தெரியுமா?
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமை
கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை பிருந்தாவன துளசி அல்லது துளசிக்கல்யாணம் எனக் கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும். துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். இவர்கள் தவிர சூரியன், தேவர்கள், கங்கை உள்ளிட்ட புனித நதிகளும் துளசி செடியில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தினசரி பக்தியுடன் துளசி பூஜை செய்து வழிபடுபவர்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். துர்மரணங்கள் ஏற்படாது. இப்பிறவியில் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று முக்தி பேற்றினை பெறுவார்கள்.
துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது. துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.

துளசி புராணம்
இத்தனை மகிமையும் மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்த கதை தெய்வீகமானது. துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. துளசி முன்பிறவியில் பூமியில் பிருந்தை என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான்.

சிவன் கொடுத்த தண்டனை
அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான். உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது.

மகாவிஷ்ணு
இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.

கணவனாக வந்த திருமால்
பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார். பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீக்குளித்து உயிரிழந்தாள்.

துளசி செடி
திருமால் இதனால் வேதனையடைந்தார். பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.

துளசி தோன்றிய தலம்
இந்தச் சம்பவம் நடந்த இடம் திருவிற்குடி என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.

துளசி கல்யாணம்
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் துளசி அன்னைக்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும். கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை பிருந்தாவன துளசி அல்லது துளசிக்கல்யாணம் எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

நெல்லி துளசி கல்யாணம்
துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி சேர்த்து வைக்க வேண்டும். வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

நினைத்தது நிறைவேறும்
பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மதியம், சந்தியா காலம், இரவு முதலிய காலங்களில் துளசியை பறிக்கக் கூடாது. அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும். துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம். விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும். கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்பவர்களுக்கும், துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களுக்கும் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என புராணம் கூறுகிறது. துளசியை ஒவ்வொரு இலையாக போட்டுதான் பூஜை செய்ய வேண்டும். ஒரே இலையை கிள்ளி கிள்ளி போடக்கூடாது.

துளசி பூஜையின் மகிமை
பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான். துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார். எனவேதான் ஒருவருக்கு உயிர் போகும் தருணத்தில் துளசி தண்ணீர் கொடுக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











