சளிக்கு கற்பூரத்தை எடுத்தால் உண்மையில் சரியாகுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க...

Camphor For A Cold: தற்போது மழைக்காலம் என்பதால் சளித் தொல்லையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றோர் அதிகம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் இந்த சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் பெற எடுத்ததும் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, கை வைத்தியங்களைத் தான் முயற்சிப்போம். அதில் பெரியவர்களுக்கு சளி தொல்லை என்றால் கசாயம் ஏதாவது செய்து குடித்து சரிசெய்ய முயற்சிப்போம்.

ஆனால் கைக்குழந்தைகளுக்கு கைவைத்தியங்களை செய்வதாக இருந்தால், துளசி, கற்பூரவள்ளி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை 1-2 சங்கு கொடுப்போம். ஆனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஒரு 8 மாத குழந்தைக்கு, அவர்களின் பெற்றோர் விக்ஸ் உடன் கற்பூரத்தை சேர்த்து கலந்து, மூக்கில் தடவியதில், அக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monsoon Health Tips Can We Take A Camphor For A Cold - Find Out What The Doctor Says

இதுப்போன்று நிறைய ஆபத்தான கைவைத்தியங்களை இன்னும் கிராமப்பகுதிகளில் மக்கள் பின்பற்றிவரத் தான் செய்கின்றனர். எவ்வளவு தான் மருத்துவர்கள் கைக்குழந்தைகளுக்கு இப்படியான விஷயங்களை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினாலும், பெற்றோர்கள் அதைக் கேட்காமல் செய்து, குழந்தையின் நிலையை மோசமாக்குகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த இச்சம்பவம் குறித்து குழந்தை நல மருத்துவரான டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சளிக்கு கற்பூரத்தை பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து விரிவாக கூறியுள்ளார்.

Take a Poll

அதில் அவர் கூறியதாவது, "கற்பூரம் என்பது வீட்டில் இருக்கும் ஒரு பொதுவான பொருள். இது பூஜைகளின் போது தீபாராதணை காண்பிக்க பயன்படுத்தப்படக்கூடியது. இந்த கற்பூரத்தை திறந்தவாறு வெளியில் வைத்தால் காற்றில் கரையக்கூடியது. அதுவும் இந்த கற்பூரத்தை வாயில் வைத்ததும் சட்டென்று கரைந்து, நேராக மூளையைத் தாக்கக்கூடிய ஒரு ஆபத்தான பொருள்.

இந்த கற்பூரம் குறைவான டோஸில் உடலினுள் சென்றால் அது படபடப்பு, நடுக்கத்தை ஏற்படுத்தலாம், அடுத்த லெவல் டோஸில் வலிப்பை ஏற்படுத்தலாம், அதற்கு அடுத்த லெவல் டோஸில் மூச்சுத்திணறல், ஏன் கோமாவிற்கு கூட போகலாம். இந்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகாவிட்டால் இறப்பு கூட நேரிடலாம். அது தான் இந்த 8 மாத குழந்தைக்கு நடந்துள்ளது. எனவே நம் வீட்டில் இருக்கும் கற்பூரத்தை குழந்தைகள் கையில் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்" என்று டாக்டர் கூறினார்.

எப்படி பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தக்கூடாது?

"கற்பூரமானது நாம் சளி வேளையில் பயன்படுத்தும் வேபோரப், தலைவலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தும் தைலங்கள் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவில் உள்ளது. ஆனால் சற்று குறைவான அளவில் இருக்கும். அதுவும் அவற்றில் 50 மிலி-க்கு 1 மிகி கற்பூரம் என்ற வீதத்தில் தான் இருக்கும். சாதாரண கற்பூரத்தை 2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் அதன் வாசனையை நுகர்ந்தாலே, அவர்களுள் சிலருக்கு வலிப்பு வந்துவிடும். அதுவும் என்ன தான் விக்ஸ் போன்றவற்றில் கற்பூரம் குறைவான அளவில் இருந்தாலும், அதை மேற்புறமாக தடவும் போது அதன் வாசனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், அதை குழந்தைகள் உட்கொள்ளும் போது, அவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே கற்பூரத்தை வெளியே கோயில் மற்றும் சாமிக்கு தீபாராதணை காண்பிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் கையில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது நேராக மூளையை தாக்கக்கூடிய அளவில் மோசமானது" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.

எனவே பெற்றோர்களே! இன்னமும் நீங்கள் சளிக்கு கற்பூரத்தை பயன்படுத்தி வந்தால் உடனே நிறுத்துங்கள். அதுவும் உங்கள் குழந்தைகளுக்கு இப்படியான கைவைத்தியங்களை பின்பற்றி வந்தால், உடனே கைவிட்டு, மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion