முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..

Posted By:

Cabbage Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைக்கோஸ் என்றாலே அலறி அடித்து ஓடுவார்களா? இதுவரை நீங்கள் முட்டைக்கோஸை பொரியல் தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு சாம்பார் செய்துள்ளீர்களா? இல்லை என்றால், அடுத்தமுறை முட்டைக்கோஸைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். அதுவும் தனியாக மசாலா அரைத்து சாம்பார் செய்யும் போது, சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமாக இருக்கும்.

Muttaikose Sambar How To Make Cabbage Sambar Recipe

உங்களுக்கு இந்த முட்டைக்கோஸ் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு..

* துவரம் பருப்பு - 100 கிராம்
* தண்ணீர் - 4-5 டம்ளர்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

பிற பொருட்கள்..

* முட்டைக்கோஸ் - 250 கிராம் (நறுக்கியது)
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 7 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவி எடுத்துக் கொண்டு, அதில் 4-5 டம்ளர் நீரை ஊற்றி, 2 தக்காளியை நறுக்கி சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, கட்டி பெருங்காயம், சீரகம், மிளகு, மல்லி, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களுடன், சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள பருப்புடன் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் காய்கறி வேகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் புளிச்சாற்றினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக சாம்பாரை கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, கொதித்து கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக சாம்பாரில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் சாம்பார் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 7, 2026, 14:42 [IST]
Desktop Bottom Promotion