உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kara Dosa With Vellai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் எப்பவும் இட்லி அல்லது தோசை தான் டிபனாக இருக்குமா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி ப்ளைன் தோசை தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கார தோசை செய்யுங்கள். இந்த கார தோசைக்கு வெள்ளை சட்னியை சைடு டிஷ்ஷாக செய்து கொடுங்கள்.

Kara Dosa With Vellai Chutney How To Make This Simple And Tasty Breakfast

இப்படி கார தோசையும், வெள்ளை சட்னியும் செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். இந்த டிபன் காம்போவை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் வாரம் ஒருமுறை இதை உங்கள் காலை மெனுவில் சேர்த்துக் கொள்வீர்கள்.

உங்களுக்கு இந்த உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடனடி கார தோசை, வெள்ளை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 3
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

கார தோசை மாவுக்கு..

* பூண்டு - 2 பல்
* தக்காளி - 2
* வெங்காயம் - 1
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* பிரஷ்ஷான இட்லி மாவு - 2 கப்

செய்முறை:

* முதலில் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து ஒருமுறை வதக்கி, பின்பு துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வெள்ளை சட்னி தயார்.
* அடுத்து தோசை மாவிற்கு மிக்சர் ஜாரில் பூண்டு, தக்காளி, வெங்காயம், காஷ்மீரி வரமிளகாய், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பிரஷ்ஷான இட்லி மாவை எடுத்து, அதில் அரைத்த பூண்டு கார சட்னியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை மொறுமொறு தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால், உடனடி கார தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 7, 2026, 7:08 [IST]
Desktop Bottom Promotion