ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?

உலக வரலாற்றில் மிகவும் மோசமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல்தான். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அணு குண்டை வீசியது. இதில் சுமார் 70,000 முதல் 1,40,000 வரையிலான மக்கள் உடனடியாக உயிரிழந்தனர். அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

Shocking Facts About the Atomic Bombing of Hiroshima and Nagasaki

ஜப்பானின் மேற்குப் பகுதியிலுள்ள ஹிரோஷிமா நகர் மீதான குண்டுவீச்சைத் தொடர்ந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு நாகசாகி மீதும் குண்டுவீசப்பட்டது. இது ஜப்பானின் சரணடைதலுக்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கும் வழிவகுத்தது. வரலாற்றின் கருப்பு நாளாக பார்க்கப்படும் இந்த சம்பவத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது. இந்த கொடூர சம்பவத்திற்கு பின்னால் நாம் அறியாத பல உண்மைகள் உள்ளது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டின் பெயர்கள்

அமெரிக்காவின் B-29 ரக 'எனோலா கே' குண்டுவீச்சு விமானம், 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 8:15 மணிக்கு ஹிரோஷாமா மீது 'லிட்டில் பாய்' என்ற அணு குண்டை வீசியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 11:02 மணிக்கு நாகசாகியின் மீது 'ஃபேட் மேன்' (Fat Man) என்று பெயரிடப்பட்ட குண்டு வீசப்பட்டது. யுரேனியத்தால் இயங்கும் அணு குண்டான 'லிட்டில் பாய்', 4,000 டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் வெப்பத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், 'ஃபேட் மேன்' (Fat Man) என்பது புளூட்டோனியத்தால் இயங்கிய ஒரு அணு குண்டாகும். இதன் வெடிப்புச் சக்தி 21 கிலோடன் டி.என்.டி (TNT)-க்கு இணையானதாக இருந்தது.

உயிரிழப்புகள்

ஹிரோஷிமாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சுமார் 70,000 முதல் 140,000 வரையிலும், நாகசாகியில் 40,000 முதல் 75,000 வரையிலும் மக்கள் உடனடியாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் ஹிரோஷிமாவின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட ஏறக்குறைய 70 சதவீதக் கட்டிடங்களை அழித்தது. அதேவேளையில், நாகசாகியின் 44 சதவீதப் பகுதி அழிவுக்குள்ளானது. அதைத்தொடர்ந்து கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் காயங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உட்பட, ஹிரோஷிமாவில் மொத்தம் 344,306 மற்றும் நாகசாகியில் 198,785 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஜப்பான் கூறுகிறது.

நீண்டகால விளைவுகள்

இந்த மாபெரும் குண்டுவீச்சிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் "ஹிபகுஷா" என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கதிர்வீச்சுக்கு ஆளானதால், அவர்களுக்கு லுகேமியா, புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்தது. ஹிபகுஷா என்பது "குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட மக்கள்" என்று பொருள்படும் ஒரு ஜப்பானியச் சொல்லாகும். உயிர் பிழைத்தவர்களை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிவித்தது, ஆனால் நாட்டில் உள்ள மக்கள் அவர்களை வேலைக்கு அமர்த்தவோ அல்லது திருமணம் செய்யவோ மறுத்ததால், அவர்களில் பலர் பாகுபாட்டை எதிர்கொண்டனர். தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், ஹிபகுஷாக்கள் நோய்களைப் பரப்புகிறார்கள் என்றும், அவர்களின் சந்ததியினர் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்றும் வதந்திகள் பரவின.

Story first published: Friday, August 7, 2026, 10:34 [IST]
Desktop Bottom Promotion