உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ்

By Mayura Akilan

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.

ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

உடலுக்கு வலிமை தரும்

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம். ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவா எடுக்கும்.

உஷ்ணத்தை குறைக்கும்

ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கேப்பை கூழ் ஊற்றுவது வாடிக்கையாக உள்ளது. இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, August 25, 2011, 14:49 [IST]
Desktop Bottom Promotion