கால்களை அழகாக்கும் மீன் ஸ்பா!

By Mayura Akilan

Fish spa
கிராமங்களில் ஆறு, குளங்களில் குளிக்கும் போது கால்களை மீன்கள் கடிக்கும். அது நமக்குள் ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தினாலும் மூளைவரை உற்சாக மூட்டும். நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மீன்கள் கடித்து தின்று விடுவதால் சருமம் புதுப்பிக்கப்படும். இந்த முறையை தற்போது அழகு நிலையங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மீன் ஸ்பா’ எனப்படும் இயற்கை பெடிக்யூர் கால்களை அழகு படுத்தும் சிகிச்சையில் படுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள். ‘மீன் ஸ்பா’ செய்து கொள்வதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி அழகியல் நிபுணர்கள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்களேன்.

மீன் ஸ்பா என்பது ரிலாக்ஸ் தரக்கூடிய அழகு சிகிச்சை. பாதங்கள் சோர்வுற்றிருந்தாலோ, வலி ஏற்பட்டாலோ மீன் ஸ்பா செய்து கொள்ளலாம்.

ஒரு தொட்டியில் நீரை நிரப்பி அதில் குட்டி குட்டி மீன்களை போட்டு நம் கால்களை அந்த தொட்டிக்குள் வைத்து ஊறவைத்து விடுவார்கள். தொட்டிக்குள் இருக்கும் மீன்கள் கால்களில் உள்ள இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவைகளை தின்றுவிட்டு கால்களை பொலிவுறச் செய்யும். மீன்கள் நம் கால்களை கடிக்கும் போது மூளையானது என்டோர்பின் என்னும் திரவத்தை சுரக்கிறது. இதனால் அமைதியும் இதமான ஒரு உணர்வு ஏற்படும்.

செல்கள் புதுப்பிக்கப்படும்

மீன் ஸ்பா செய்து கொள்ளும் போது இறந்து போன செல்கள் நீக்கப்படுவதால் புதிய செல்கள் உருவாகின்றன. இதனால் பாதங்கள் மென்மையும், அழகும் அடைகின்றன. ரத்த ஓட்டம் சீரடைகிறது. பாத குடைச்சல், பாத வலி போன்றவைகள் இருந்தாலும் எளிதில் சரியாகிவிடும். சாதாரண அழகு சிகிச்சையாக மட்டுமில்லாமல் மீன் ஸ்பா ஆரோக்கியத்தோடும், மன அமைதியோடும் தொடர்புடையதாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீன் ஸ்பா சிகிச்சை செய்து கொள்ளுங்களேன் நீங்களே உற்சாகமாக உணர்வீர்கள்.

Story first published: Sunday, June 3, 2012, 14:22 [IST]
Desktop Bottom Promotion