இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. கெட்ட கொழுப்பும் குறையும்.. உடல் சூடும் தணியும்...

Posted By:

Varagu Arisi Vendhaya Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்பது போன்றவற்றை பின்பற்றி வருகிறீர்களா? என்ன டயட்டில் இருந்தாலும், காலை உணவு மிகவும் இன்றியமையாதது.

காலையில் சாப்பிடும் உணவு தான் ஒரு நாளில் மிகவும் முக்கியமான உணவாகும். இந்த காலை உணவின் போது நல்ல சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் எடையைக் குறைக்க நினைத்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்க தூண்டும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

Varagu Arisi Vendhaya Kanji How To Make a Varagu Arisi Vendhaya Kanji Recipe

உடல் எடையைக் குறைக்க சிறுதானியங்கள் பெரிதும் உதவி புரிகின்றன. முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தனர். அதனால் தான் அவர்கள் நீண்ட காலம் ஃபிட்டாக தொப்பை இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது மக்கள் மத்தியில் நவதானிய உணவுகள் மறக்கப்பட்டுவிட்டன.

நீங்கள் அதிகம் சிரமப்படாமல் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், நவதானியங்களில் ஒன்றான வரகரிசியைக் கொண்டு கஞ்சி தயாரித்து காலையில் குடித்து வாருங்கள். அதுவும் இந்த கஞ்சியுடன் வெந்தயத்தையும் சேர்த்து செய்யும் போது, உடல் எடையுடன், உடல் சூடும் குறையும். முக்கியமாக இந்த கஞ்சியை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, குழந்தைகளும் குடிக்கலாம்.

உங்களுக்கு வரகரிசி வெந்தய கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி வெந்தய கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரகு - 1/2 கப் அல்லது 50 கிராம்
* பாசிப்பருப்பு - 1/2 கப் அல்லது 50 கிராம்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 6 கப்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* மிளகு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் வரகரிசி மற்றும் 1/2 கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நீரில் 2 முறை கழுவி விட்டு, சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வெந்தயத்தை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை வதக்கி, பின் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கஞ்சியை கலந்து, கரண்டியால் பூண்டு மற்றும் வெந்தயத்தை மசித்து விட வேண்டும்.
* கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், 1 கப் சுடுநீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் இடி உரலில் 1/4 டீஸ்பூன் மிளகு சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கஞ்சியில் இந்த தேங்காய் மற்றும் மிளகுத் தூளை சேர்த்து கிளறினால், சுவையான வரகரிசி வெந்தய கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, April 12, 2025, 8:05 [IST]
Desktop Bottom Promotion