திருவாதிரை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...

Posted By:

Thiruvathirai Special Ezhu Kari Kootu Recipe In Tamil: ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் திருவாதிரையானது 2026 ஜனவரி 02 ஆம் தேதி இரவு 08:04 மணிக்குத் தொடங்கி, 2026 ஜனவரி 03 ஆம் தேதி மாலை 05:27 மணி வரை நீடிக்கும்.

இந்நாளில் மக்கள் விரதமிருந்து சிவபெருமானை நடராஜர் அவதாரத்தை வழிபாடு செய்வார்கள். மேலும் இந்த திருவாதிரை நாளில் மக்கள் திருவாதிரை களி மற்றும் திருவாதிரை ஏழு கறி கூட்டு செய்வார்கள். இந்த ஆண்டு திருவாதிரையில் நீங்களும் இவற்றை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இவற்றில் ஏற்கனவே திருவாதிரை களியை எப்படி செய்வதென்று பார்த்துவிட்டோம்.

Thiruvathirai Kootu How To Make a Thirivathirai Special Ezhu Kari Kootu

இனி திருவாதிரை ஏழு கறி கூட்டு எப்படி செய்வதென்று காண்போம். இந்த திருவாதிரை ஏழு கறி கூட்டு செய்வது மிகவும் சுலபம். கீழே அந்த திருவாதிரை ஏழு கறி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* கட்டி பெருங்காயம் - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது

கூட்டு செய்வதற்கு...

* கத்திரிக்காய் - 3 (நறுக்கியது)
* வாழைக்காய் - 1 (நறுக்கியது)
* அவரைக்காய் - 5 (நறுக்கியது)
* மஞ்சள் பூசணிக்காய் - சிறிது (நறுக்கியது)
* வெள்ளை பூசணிக்காய் - சிறிது (நறுக்கியது)
* சேனைக்கிழங்கு - சிறிது (நறுக்கியது)
* பச்சை மொச்சை - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* புளி - எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* வேக வைத்த துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் கட்டி பெருங்காயத்தை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், மஞ்சள் பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய், சேனைக்கிழங்கு மற்றும் பச்சை மொச்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு பச்சை வாசனை போக 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்து கிளறினால், சுவையான திருவாதிரை ஏழு கறி கூட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, January 2, 2026, 19:35 [IST]
Desktop Bottom Promotion