சர்க்கரைவள்ளிக் கிழங்கும், இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..

Posted By:

Sweet Potato Bonda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு, வெங்காயம் கொண்டு, பஜ்ஜி போண்டா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளதா?

அப்படியானால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொண்டு ஒரு இனிப்பு போண்டா செய்யுங்கள். இந்த இனிப்பு போண்டா மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இதை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்தால், அடிக்கடி கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் சுவை அற்புதமாக இருக்கும்.

Sweet Potato Bonda How To Make a Sakkaravalli Kilangu Bonda Recipe

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
* துருவிய தேங்காய் - 1/4 மூடி
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* சர்க்கரை - இனிப்பு சுவைக்கேற்ப
* எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

கோட்டிங்கிற்கு...

* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் கழுவி, இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் உங்களுக்கு எவ்வளவு இனிப்புச் சுவை வேண்டுமோ, அந்த அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும்.
* பிறகு கரண்டியால் அல்லது கையால் நன்கு மசித்து விட வேண்டும்.
* அடுத்து பிசைந்த கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இட்லி மாவு நீராக இருந்தால், மாவை ஓரளவு கெட்டியாக்க தேவையான அளவு அரிசி மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த மாவானது கோட்டிங் கொடுப்பதற்கு ஏற்ற பதத்தில் இருக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள கிழங்கை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று ஒரே வேளையில் ஒரு 4-5 உருண்டைகளைப் போடுங்கள். முக்கியமாக உருண்டைகளைப் போட்ட உடனே கரண்டியால் கிளறி விடாமல், 1 நிமிடம் கழித்து கிளறி விட்டு, பொன்னிறமானதும் எடுத்தால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா தயார்.

Image Courtesy: You Too Can Cook

[ of 5 - Users]
Story first published: Thursday, March 14, 2024, 17:45 [IST]
Desktop Bottom Promotion