1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Semiya Adai Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான டிபனை செய்து சாப்பிடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் சேமியா இருந்தால், அந்த சேமியாவைக் கொண்டு அடை செய்து சாப்பிடுங்கள். இந்த சேமியா அடை செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Semiya Adai How To Make This Healthy Breakfast At Home

மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த அடையை ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். அதுவும் இந்த சேமியா அடைக்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். வேண்டுமானால் ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு இந்த சேமியா அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த சேமியா - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4
* ரவை - 1/4 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த சேமியாவை எடுத்துக் கொண்டு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் சேமியா, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய கேட்டை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள், பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து முதலில் கிளறி விட வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சிறிது நீரை ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி பேனில் பரப்பி விட்டு, ஒரு கரண்டி அடை கலவையை வைத்து அடை போன்று பரப்பி விட்டு, மிதமான தீயில் வைத்து மூடி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து மேலே 1/4 டீஸ்பூன் நெய்யை பரப்பி தடவி விட்டு, திருப்பி போட்டு, நன்கு முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சேமியா அடை தயார். இதேப் போன்று அனைத்து மாவையும் அடையாக சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 24, 2026, 6:48 [IST]
Desktop Bottom Promotion