மணமணக்கும்.. காஞ்சிபுரம் ரவா பொங்கல் - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Kanchipuram Rava Nei Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்யும் அரிசி மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யாமல், ஒருமுறை ரவை மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.

வெண்பொங்கல் செய்ய கூட நேரம் எடுக்கும். ஆனால் ரவா பொங்கலை 10 நிமிடத்தில் செய்து விடலாம். இந்த ரவா பொங்கல் காஞ்சிபுரத்தில் மிகவும் ஃபேமஸ். இந்த காஞ்சிபுரம் ரவா பொங்கலை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பொங்கல் பிடிக்காதவர்களும் போட்டி போட்டு சாப்பிடுவார்கள். இந்த பொங்கலுக்கு தேங்காய் சட்னி, சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

Rava Pongal Recipe How To Make a Kanchipuram Rava Nei Pongal Recipe
Photo Credit:

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, சற்று ஸ்பெஷலாகவும், அதே சமயம் நீண்ட நேரம் சமையலறையில் நிற்காமல் சட்டென்று ஒரு காலை டிபனை செய்ய நினைத்தால், இந்த காஞ்சிபுரம் ரவா பொங்கல் சரியான தேர்வாக இருக்கும். இந்த பொங்கலை செய்தால், நிச்சயம் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

உங்களுக்கு காஞ்சிபுரம் ரவா பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காஞ்சிபுரம் ரவா பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் 3 கப்
* நெய் - 100 மிலி
* ரவை - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 25 கிராம்
* இஞ்சி - 1/4 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் அதில் 3 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, பாசிப்பருப்பை வேக வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 50 மிலி நெய்யை ஊற்றி சூடானதும், அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாசிப்பருப்பு பூப்போன்று வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பின் மிதமான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள நெய் ஊற்றி சூடானதும், மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அதில் முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து இறக்கி, வெந்து கொண்டிருக்கும் பொங்கலுடன் சேர்த்து கிளறினால், சுவையான காஞ்சிபுரம் ரவா நெய் பொங்கல் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion