ஈஸியான மற்றும் ருசியான.. இறால் கிரேவி

உங்களுக்கு இறாலை சமைக்கத் தெரியாதா? கவலைப்பட வேண்டாம். இந்த வார இறுதியில் இறாலை வாங்கி வந்து, அதைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த இறால் கிரேவி செய்வது மிகவும் சுலபம்.

Posted By:

உங்கள் வீட்டில் உள்ளோர் இறாலை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்களுக்கு இறாலை சமைக்கத் தெரியாதா? கவலைப்பட வேண்டாம். இந்த வார இறுதியில் இறாலை வாங்கி வந்து, அதைக் கொண்டு கிரேவி செய்து கொடுங்கள். இந்த இறால் கிரேவி செய்வது மிகவும் சுலபம். மேலும் இறால் கிரேவியை சாதம் மற்றும் சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Prawn Gravy Recipe In Tamil

இறாலை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இறாலில் செலினியம் அதிகம் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் பி12 உள்ளதால், இதய ஆரோக்கியம் பராமரிக்கப்படும். இது தவிர இறாலில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமம், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். முக்கியமாக ஜிங்க் சத்து இறாலில் அதிகம் உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். எனவே நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், உங்கள் உணவில் இறாலை சேர்க்க மறவாதீர்கள்.

உங்களுக்கு இறாலைக் கொண்டு சுவையான கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இறால் - 1/2 கிலோ

* சீரகம் - 1/4 டீஸ்பூன்

* கடுகு - 1/4 டீஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

* தக்காளி - 2

* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - 5

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் கழுவி வைத்துள்ள இறாலை சேர்த்து, மசாலா இறாலில் நன்கு ஒன்றுசேரும் வரை வதக்க வேண்டும்.

* அடிபிடிப்பது போன்று இருந்தால், கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் இறாலை வேக வைக்க வேண்டும்.

* இறாலானது சுருங்கி, சுருண்டு வட்ட வடிவில் மாறும் போது, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடுங்கள். இப்போது சுவையான இறால் கிரேவி தயார். அளவுக்கு அதிகமாக இறாலை வேக வைக்க வேண்டாம். இல்லாவிட்டால் அது ரப்பர் போன்றாகிவிடும்.

Image Courtesy: simpleindianrecipes

[ of 5 - Users]
Story first published: Saturday, December 17, 2022, 13:35 [IST]
Desktop Bottom Promotion