2 வெங்காயம், 4 தக்காளி, பொட்டுக்கடலை மாவு இருந்தா.. இட்லிக்கு இந்த குழம்பை செய்யுங்க.. ஊத்தி குடிப்பாங்க..

Posted By:

Pottu Kadalai Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் அடிக்கடி இட்லி தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னி அல்லது சாம்பார் தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான சைடு டிஷ்ஷை செய்து தருமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி, பொட்டுக்கடலை இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பொட்டுக்கடலை குழம்பு செய்யுங்கள்.

இந்த குழம்பு மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இந்த குழம்பை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து தருமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Pottu Kadalai Kuzhambu How To Make a Pottu Kadalai Kuzhambu Recipe

உங்களுக்கு பொட்டுக்கடலை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சாம்பார் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் பொட்டுக்கடலை மாவை நீரில் கட்டிகளின்றி கரைத்து, அதை வதங்கி கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பொட்டுக்கடலை குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 24, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion