முருங்கைக்காயை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்...

Posted By:

Murungaikkai Masala Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இன்று சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் உள்ளோர் முருங்கைக்காயை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் முருங்கைக்காய் மசாலாவை செய்யுங்கள். இந்த முருங்கைக்காய் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Murungaikkai Masala Recipe

அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிவாறு இருக்கும். உங்களுக்கு முருங்கைக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே முருங்கைக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* அரைத்த தக்காளி - 1/2 கப்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3-4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* உப்பு - சுவைக்கேற்ப

மசாலா பொடிகள்...

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* நீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் முருங்கைக்காயை கழுவி 3 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்காயைப் போட்டு, காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும்.
* முருங்கைக்காய் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மல்லித் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள முருங்கைக்காயை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.

Image Courtesy: padhuskitchen

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 29, 2023, 18:52 [IST]
Desktop Bottom Promotion