முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...

Posted By:

Murungai Keerai Sambar: இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

இந்த முருங்கைக்கீரை சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் முருங்கைக்கீரை சாம்பார் சத்தானதும் கூட. ஏனெனில் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்துமே இந்த சாம்பாரில் முழுமையாக இறங்கியிருக்கும்.

Murungai Keerai Sambar Recipe

முக்கியமாக இந்த முருங்கைக்கீரை சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். உங்களுக்கு முருங்கைக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு - 1 கப்
* புளி நீர் - 1 கப்
* முருங்கைக்கீரை - 200 கிராம்
* சின்ன வெங்காயம் - 1 கப்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முருங்கைக்கீரையை சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துவரம் பருப்பைக் கழுவி போட்டு, அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 4-5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், முருங்கைக்கீரை, புளிச்சாறு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் உடனே விசிலை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் முருங்கைக்கீரை அளவுக்கு அதிகமாக வெந்து, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
* பிறகு பருப்பு வேக வைத்த குக்கரைத் திறந்து, அதில் உள்ள பருப்பை மசித்து, முருங்கைக்கீரை மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து, அந்த சாம்பாரை ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

Image Courtesy: archanaskitchen

[ of 5 - Users]
Story first published: Friday, September 22, 2023, 12:14 [IST]
Desktop Bottom Promotion