மிளகு வெச்சு ஒருடைம் இப்படி குழம்பு செய்யுங்க.. டேஸ்ட் நாக்குல நிக்கும்.. சளியும் டக்குன்னு சரியாகும்...

Posted By:

Milagu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சளி பிடித்து பாடாய்படுகிறார்களா? அப்படியானால் அவர்களின் சளியை முறிக்கும் வகையில், நல்ல காரசாரமான ஒரு குழம்பு செய்யுங்கள். அதுவும் சளியை முறிப்பதில் மிளகு சிறந்தது.

இந்த மிளகு கொண்டு குழம்பு செய்தால், சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மிளகு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

Milagu Kuzhambu How To Make a Pepper Kuzhambu Recipe

உங்களுக்கு மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு....

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 20
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - எலுமிச்சை அளவு
* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கசகசா மற்றும் முந்திரியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் புளியையும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சோம்பு, கடுகு, வெந்தயம், வரமிளகாய், மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்த முந்திரி மற்றும் கசகசாவை நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் ஈரமில்லாத ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து அதை பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியைக் கரைத்து, அந்த சாற்றினையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, பச்சை வாசனை போக 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் கசகசா விழுதையும் சேர்த்து கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பின் நிறம் மாறி குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து மிதந்தால், அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்போது சுவையான மிளகு குழம்பு தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Wednesday, July 31, 2024, 14:10 [IST]
Desktop Bottom Promotion