இட்லிக்கு ஒருவாட்டி இந்த மதுரை தக்காளி தண்ணி சட்னியை செஞ்சு பாருங்க.. கணக்கில்லாம இட்லியை சாப்பிடுவாங்க..

Posted By:

Madurai Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று இன்னும் முடிவு செய்யவில்லையா? அப்படியானால் மதுரை தக்காளி தண்ணி சட்னியை செய்யுங்கள்.

இந்த சட்னி இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த சட்னியின் சுவையானது ரோட்டுக்கடைகளில் கொடுக்கப்படும் சட்னியின் சுவையைப் போன்றே அட்டகாசமாக இருக்கும். இதை செய்வது மிகவும் ஈஸியும் கூட.

Madurai Thakkali Thanni Chutney How To Make a Madurai Thakkali Chutney

உங்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 20
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் - 3
* வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி வரமிளகாய், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய வரமிளகாய், பூண்டு மற்றும் 1/2 மூடி துருவிய தேங்காயை சேர்த்து முதலில் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் மீதமுள்ள வதக்கிய தக்காளி வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பொட்டுக்கடலையையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சற்று தாராளமாக நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான மதுரை தக்காளி தண்ணி சட்னி தயார்.

Image Courtesy: Erode Ammachi Samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 1, 2024, 7:44 [IST]
Desktop Bottom Promotion