மழை நேரத்துல இந்த கோவைக்காய் மிளகு காரக்குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்...

Posted By:

Kovakkai Milagu Kara Kuzhambu Recipe In Tamil: மழை பெய்யும் போது நன்கு காரசாரமாகவும், அதே சமயம் ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் கோவைக்காய் இருந்தால், அதைக் கொண்டு கோவைக்காய் மிளகு காரக்குழம்பு செய்யுங்கள்.

இந்த குழம்பு சளி, இருமல் பிடித்திருப்பவர்களின் வாய்க்கு சுவையாகவும், சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இந்த குழம்பை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த குழம்பு வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Kovakkai Milagu Kara Kuzhambu How To Make a Kovakkai Milagu Kara Kulambu

உங்களுக்கு கோவைக்காய் மிளகு காரக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவைக்காய் மிளகு காரக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* அரிசி - 1/2 டீஸ்பூன்

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கோவைக்காய் - 1/4 கிலோ
* உப்பு - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* தேங்காய் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் அரிசியை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி, 7 நிமிடம் நன்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை சேர்த்து, வதக்கி வைத்துள்ள கோவைக்காய் மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கோவைக்காய் மிளகு காரக்குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 21, 2025, 15:02 [IST]
Desktop Bottom Promotion