நாவூறும் திருபாகம் ரெசிபி... மகா கந்த சஷ்டி நாளில் முருகப்பெருமானுக்கு பிடித்த இந்த இனிப்பை செய்து வழிபடுங்கள்

Posted By:

Kanda Sashti Special Thirupagam Recipe in Tamil: 'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். அதாவது சஷ்டியில் குழந்தைகள் வேண்டி விரதம் இருந்தால் குழந்தை பேரு கிடைக்கும் என்பது தான் இதன் விளக்கம். இது குழந்தை பேரு என்பதற்காக மட்டும் இன்றி அவர்களின் பொருளாதார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம், குடும்ப நலன், மற்றும் பிள்ளைகளின் திருமணம் ஆகியவற்றிற்காகவும் சிலர் விரதம் எடுப்பார்கள்.

சிலர் மாத மாதம் சஷ்டி விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா கந்தசஷ்டியின் போது ஆறு நாட்கள் விரதம் எடுப்பார்கள். ஒரு சிலர் சூரசம்காரம் நடக்கும் மகா கந்த சஷ்டி நாளில் மட்டும் விரதம் எடுப்பார்கள். அவரவர் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப விரத முறைகளை பின்பற்றுவார்கள்.

Kanda Sashti Special Recipe How to Make Thirupagam

எப்படி விரதம் முறைகளை பின்பற்றினாலும் காலையில் குளித்து முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி பிரசாதம் படைப்பதை அனைவருமே வழக்கமாக செய்வார்கள். அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பொருட்களை பிரசாதமாக படைப்பார்கள். சூரசம்காரமான நாளை திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பிறகு முருகனுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும் திருப்பாகம் எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

- கடலை மாவு - 1 கப்
- முந்திரி பருப்பு - 1 கப்
- பால் - 2 கப்
- சர்க்கரை - 1 ½ கப்
- நெய் - 1 கப்
- ஏலக்காய் - 2

செய்முறை:

- பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

- ஈரம் இல்லாத ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பை சேர்த்து பல்ஸ் மோடில் பொடியாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

- அதே மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து கடலை மாவை சேர்த்து வாசம் வரும் வரை
நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

- அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

- பாலின் அளவு குறைந்து நன்றாக கெட்டியானதும் அதனுடன் சிறிதளவு நெய் மற்றும் அரைத்து வைத்த சர்க்கரை ஏலக்காயை சேர்க்கவும்.

- பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

- சர்க்கரை கரைய துவங்கியதும் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதால் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.

- அவ்வப்பொழுது சிறிதளவு நெய்யை சேர்த்து கிளறவும்.

- கடைசியாக அரைத்து பொடி செய்து வைத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.

- நன்றாக வெந்து நெய் தனியே வர ஆரம்பிக்கும் பொழுது சேர்ப்பதை நிறுத்தி நன்றாக கிளறி இறக்கினால் சுவையான திருச்செந்தூர் சூரசம்கார ஸ்பெஷல் நெய்வேத்திய திருப்பாகம் தயார்!

- இதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி அல்லது திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

- அல்லது பிஸ்தா அல்லது பாதாமை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கிளறிக் கொள்ளலாம்.

- இதன் நிறத்திற்கு பாலில் ஊற வைத்த குங்குமப்பூ அல்லது சிறிதளவு மஞ்சள் வண்ணக் கேசரி பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 26, 2025, 21:44 [IST]
Desktop Bottom Promotion