தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜியை 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Dhaba Style Paneer Bhurji Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் பன்னீரை செய்வீர்களா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் சிம்பிளாக ஒரு பன்னீர் சைடு டிஷ் செய்ய நினைத்தால், பன்னீர் புர்ஜியை செய்யுங்கள்.

இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜியை செய்யுங்கள். இந்த பன்னீர் புர்ஜி சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த பன்னீர் புர்ஜி 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருப்பதால், வேலைக்கு செல்பவர்களும், பேச்சுலர்களும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

Dhaba Style Paneer Bhurji How To Make a Paneer Bhurji In 10 Minutes

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தயிர் மசாலாவிற்கு...

* கெட்டி தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (நீளவாக்கில் நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 கப் கெட்டித் தயிரை எடுத்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வெண்ணெய் சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு தயிர் மசாலாவை சேர்த்து, சிறிது நீரை சேர்த்து கிளறி, ஒரு கொதி விட வேண்டும்.
* அடுத்து துருவி வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி, 3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் எண்ணெய் பிரிய வேக வைத்து இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, January 5, 2026, 22:10 [IST]
Desktop Bottom Promotion