சப்பாத்திக்கு அடுத்தமுறை பன்னீரை இந்த மாதிரி மசாலா செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..

Posted By:

Chettinad Pepper Paneer Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் கேட்கிறார்களா? நீங்கள் எப்போதும் பன்னீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா?

அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான, அதே சமயம் சளி பிடித்திருந்தால் அந்த சளி சரியாகும் படியான நல்ல காரசாரமான செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலாவை செய்யுங்கள்.

Chettinad Pepper Paneer Masala Recipe

இந்த செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* ஜாவித்திரி -1
* பட்டை - 1 இன்ச்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு

கிரேவிக்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தக்ககாளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், மல்லி, மிளகு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்திரி, பட்டை, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது செட்டிநாடு மசாலா தயார்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து, மேலே சிறிது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா தயார்.

Image Courtesy: hebbarskitchen

[ of 5 - Users]
Story first published: Monday, November 6, 2023, 15:12 [IST]
Desktop Bottom Promotion