கர்ப்பகாலத்தில் தியானம் கருகுழந்தைகளுக்கு நல்லது!

By Mayura Akilan

Meditation for Pregnant Women
திருமணமான பெண்கள் கர்ப்பம் தரிப்பது இயல்பானது என்றாலும் முதல்முறையாக கருவை சுமக்கும் பெண்களுக்கு ஒருவித படபடப்பு ஏற்படுவது இயற்கையே. எனவே கர்ப்பிணிகள் தியானம், யோகா போன்றவை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன நிலை அமைதியடைவதோடு கருக்குழந்தைக்கும் நன்மை ஏற்படுவது தெரியவந்துள்ளது.

மன அமைதி

கர்ப்பிணிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். குழந்தையை பத்திரமாக பெற்றெடுத்து அறிமுகப்படுத்தவேண்டுமே என்ற எண்ணம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது இயல்பு. எனவே கர்ப்பிணிகள் தியானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி ஏற்படுகிறது.

குழந்தைக்கு நன்மை தரும்

அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கண்களை மூடி மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும். கவனம் முழுவதும் அடிவயிற்றில் உள்ள குழந்தையை பற்றியே இருக்கவேண்டும். இதனால் மனம் அமைதியடையும். இது உங்களின் கரு குழந்தைக்கு நன்மை அளிக்கும். கண்களை மூடி தியானிக்கும் பொழுது மனதிற்கு இதமான மந்திரங்களை உச்சரித்தால் கூடுதல் நன்மை தரும். இதனால் கருவில் உள்ள குழந்தை அமைதியான முறையில் சீராக வளர்ச்சியடைந்து உலகத்தை பார்க்க தயாராகும்.

மன அழுத்தம் குறைகிறது.

தியானம் மேற்கொள்வதன் மூலம் கர்ப்ப கால மன அழுத்தம் குறைகிறது. கர்ப்பிணிகளுக்கு மசக்கை காலத்திய மயக்கம், உயர்ரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்றவை ஏற்படுவது கட்டுபடுத்தப்படுகிறது.

தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் அதிகரிப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

தியானத்தோடு கர்ப்பிணிகள் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று செக்அப் செய்து கொள்ளவேண்டும். சத்தான உணவுகளை உட்கொண்டு வர எளிதான சுகப்பிரசவம் ஏற்படும்.

Story first published: Tuesday, February 21, 2012, 11:02 [IST]
Desktop Bottom Promotion